என்றோ, எங்கோ, செய்யப்பட்ட சிறு உதவி

Thursday, November 12, 2009

நீண்டதொரு காலப்பகுதியின் பின் உலகின் எங்கோ ஒரு மூலயில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை ஒர் உயர் அதிகாரியிடமிருந்து கேட்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிட்டியது.


தாய், தந்தையினை இழந்து அனாதரவாக வாழ்ந்த சிறுவன் ஒருவன் தன் கஷ்டத்தின் மத்தியிலும், சிறு சிறு ஊழியம் புரிந்து அதில் வரும் பணத்தினை வைத்து தனது பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இவ்வாறிருக்கையில் தொடர்ச்சியாக பல நாட்கள் வேலைகிடைக்காததினால் உண்ண உணவின்றி தவித்த இச் சிறுவன் பசியினால் மிகவும் வாட்டமுற்று, பாதையோரமிருந்த ஒரு வீட்டினுள் நுழைந்து தாகத்திற்கு தண்ணீர் தாருங்கள் அம்மா என அங்கிருந்த பெண்ணிடம் கேட்டிருக்கின்றான். இவனது வாடிய முகத்தினைப் பார்த்த அந்தத் தாய் மனமிரங்கி தண்ணீரிற்குப் பதிலாக பாலினை ஒரு குவளை முழுவதும் நிரப்பி வழங்கினாள். மனநிறைவோடு பாலினை அருந்திய அச் சிறுவன் அத்தாயிடம் நன்றி கூறிவிட்டு அகன்றான்.


காலங்கள் பல கடந்த பின்னர்......


வயதாளியான அப் பெண்மணி மிகவும் பாரதூரமாக நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியான நீண்ட பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்களால் பரிந்துரை வழங்கப்பட்டது. உடனடியாக நவீன தொழில் நுட்பத்தில் பெயர்போன ஒரு வைத்திய சாலையினில் அனுமதிக்கப்பட்ட அப்பொண்மணிக்கு சத்திர சிகிச்சையும் நடைபெற்று முடிந்தது.


சிகிச்சையின் பின்னர் வீடுநோக்கி புறப்பட இருந்த பெண்மணியிடம் வைத்தியச் செலவுகளுக்காகன பணம் செலுத்தும் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.


என்ன அதிசயம் பணம் முழுவதும் செலுத்தப்பட்டிருந்த அந்தப் பற்றுச் சீட்டில் சில வரிகள்.......


“அம்மா அன்று நீங்கள் கொடுத்துதவிய பாலினால் இன்று உயிர்வாழ்பவன்,
அன்று நீங்கள் உதவியிருக்காவிட்டால் இன்று நான்??????????????


கண்ணிலே நீர்ததும்ப நின்றிருந்த அந்தத் தாய்முன் சத்திர சிகிச்சை நிபுணராக அந்தச் சிறுவன்...


என்றோ ….. எங்கோ........ செய்யப்பட்ட சிறு உதவி, பெருவெள்ளமாக...................



இக்கதையினைச் சொன்ன அதே அதிகாரியிடமிருந்து இன்னொரு தகவல்......

இப்போது நீங்கள் எவ்வளவு தூரம் வளர்சியடைந்து விட்டீர்கள், என்றாவது ஒருநாள் உங்களை இவ் உலகிற்கு கூட்டிவந்த வைத்தியர்களை, உங்கள் உடலிலுள்ள தசைகளில், எலும்புகளில் சேதம் விளைவிக்காது, ஊனத்தோடு இருந்த உங்களை வாரியெடுத்து கழுவித் தூய்மையாக்கி உங்கள் தாயிடம் வழங்கிய தாதிமாரை நினைத்துப் பார்த்ததுண்டா நீங்கள்??????????

என்றாவது அவர்களிடம் சென்று நன்றி கூற நினைத்ததுண்டா நீங்கள்???????????

அவரது வினாக்களுக்கு விடை கூற நிரணியற்று தடுமாறியபடி நாங்கள்....

சிறிதளவு நேரத்தின் பின் மீண்டும் அவரிடமிருந்து ஒரு செய்தி,

“ உங்களால் அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய கடனை, உங்களை நாடிவருபவர்களுக்கு உதவுவதன் மூலம் காணிக்கையாக்குங்கள்”.

இன்றெனக்கு மிகவும் மனநிறைவைத் தந்திருக்கிறது இவரது இறுதிச் செய்தி.


உங்களுக்கு???




Share/Save/Bookmark

Read more...

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு

Monday, August 24, 2009

சென்ற இரு வாரங்களாக பயிற்சியின் நிமிர்த்தம் திருகோணமலை கச்சேரியில் இணைக்கப்பட்டிருந்தேன்.


பலமுறை பார்த்த கல்வெட்டுத்தான் இருப்பினும், ஒவ்வொரு தடவையும் பிரட்ரிக் கோட்டையைக் கடக்கும் போது எனக்குள் அக் கல்வெட்டுப் பற்றி அறியவேண்டும் என்னும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்ததது.
இக் கல்வெட்டுப் பற்றிய தேடலில் பல புத்தகங்கள் உதவினாலும் 1993ல் வெளியான செல்வி.க.தங்கேஸ்வரி அவர்களால் எழுதப்பட்ட 'குளக்கோட்டன் தரிசனம்' என்னும் நூல் எனக்குப் பெரும் உதவியாக இருந்தது.



(பிரட்றிக் கோட்டையின் முன்புற, பின்புற வாசல்களின் புகைப்படங்கள்)


திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.


கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.





(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)


இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க் தரிசனப் பாடலாக உள்ளது.


கல்வெட்டு வாசகம்

னனே குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே வை த
ரை
கள

இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு

"முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண், செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"

இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர் அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.



கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச் சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில் பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.


கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா' என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.



Share/Save/Bookmark

Read more...

புடவைக்கட்டு - புகைப்படங்கள்

Sunday, August 16, 2009









வேலை நிமிர்த்தமாக புல்மோட்டைக்குப் பயணித்தபோது இடையில் புடவைக்கட்டு எனும் இடத்தில் மிதவைப்பாதை மூலம் பயணிக்க நேர்ந்தது. அப்போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....



Share/Save/Bookmark




Read more...
Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP